புதுடெல்லி: வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை (Minimum balance) பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ஒரே ஆண்டில் இந்திய வங்கிகள் ரூ.7,000 கோடி அபராதம் விதித்துள்ளன.
கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் இந்த அபராதம் வசூலிக்கப்பட்டதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், வசூலிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகையில் பொதுத்துறை வங்கிகள் ரூ.2,137 கோடியும் தனியார் வங்கிகள் ரூ.4,948 கோடியையும் வசூலித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வங்கிகளில் ஆக அதிகமாக ‘ஹெச்டிஎஃப்சி’ ரூ.1,798 கோடியும் ‘ஆக்சிஸ்’ வங்கி ரூ.1,081 கோடியும் வசூலித்துள்ளன.
இந்தியப் பிரதமரின் வங்கிக்கணக்குத் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டுள்ள சேமிப்புக் கணக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என்று நிதித்துறை இணை அமைச்சர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகள் இவ்வாறு அபராதம் வசூலித்ததற்குப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

