தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியக் கடல்துறை வாரம்: ரூ. 10 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

2 mins read
e56abf14-1d33-46be-a72e-6af8cd7863b4
‘இந்தியக் கடல்துறை வாரம் 2025’ எனும் ஐந்து நாள் மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 600 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

மும்பை: மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சின் சார்பில் ‘இந்தியக் கடல்துறை வாரம் 2025’ என்ற அனைத்துலக மாநாடு, மும்பை கோரேகானில் உள்ள பம்பாய் வர்த்தகக் கண்காட்சி அரங்கத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை (அக்டோபர் 27-31) நடைபெறுகிறது.

உலக நாடுகளின் துறைமுகங்கள், கடல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கட்கிழமை (அக்டோபர் 27) தொடங்கிவைக்கிறார்.

விழாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதை அமைச்சர் சர்பானந்த சோனோவால், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஞ்ஜி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் உட்பட பலர் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே, நெதர்லாந்து, டென்மார்க், சுவீடன் உள்ளிட்ட நாடுகள் இந்த மாநாட்டை இணைந்து நடத்துகின்றன.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, கோவா, அந்தமான் ஆகிய மாநிலங்களின் துறைமுகங்கள், கடல் போக்குவரத்துத் துறையில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று இந்திய ஊடகங்கள் கூறின.

இதுகுறித்து இந்தியத் துறைமுகங்கள் கூட்டமைப்புத் தலைவரும் சென்னை, காமராஜர் துறைமுகங்களின் தலைவருமான சுனில் பாலிவால், “உலக அளவிலான கடல்துறை வளர்ச்சி, வர்த்தக வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் உட்பட 350 பேர் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுவார்கள்,” என்று கூறினார்.

மேலும், “உலக அளவில் இந்தியத் துறைமுகங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு இந்த மாநாடு உதவும். முன்னணி நிறுவனங்கள் சார்பில் சுமார் 500 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 85 நாடுகளைச் சேர்ந்தோருடன் இந்தியாவைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார் அவர்.

இந்த மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பீட்டிலான 600 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை, பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் சந்திப்பு நடைபெறும் என்றும் அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்