மணிப்பூரில் அமைச்சர் வீடு மீது குண்டு வீச்சு: இணையச் சேவை தடை நீட்டிப்பு

மணிப்பூரில் அமைச்சர் வீடு மீது குண்டு வீச்சு: இணையச் சேவை தடை நீட்டிப்பு

1 mins read
bce585bb-b252-4d24-a704-3344f9a3f945
அமைதிக்குத் திரும்பிய மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

இம்பால்: தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் மணிப்பூரில் செப்டம்பர் 20ஆம் தேதி வரை இணையச் சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் 2023 மே மாதம் குக்கி - மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பின்னர் நிலைமை சீராகி வந்த நிலையில், கடந்த வாரம் மணிப்பூர் தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்தச் சம்பவம் மீண்டும் மணிப்பூரில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கை யாக, வானூர்தி-எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி, அஸ்ஸாம் ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், உக்ருல் மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் அமைச்சர் காஷிம் வசும் வீட்டின் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெடிகுண்டு வெடித்த சமயத்தில் அமைச்சர் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் வெளியில் சென்றிருந்ததாகவும் வீட்டின் சுவர்கள் சேதமடைந்ததாகவும் ஊடகத் தகவல்கள் கூறின.

குறிப்புச் சொற்கள்