புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஜோன்பூர் மாவட்டத்தில் இணையத்தளங்களின் செயல்பாட்டில் இருந்தாலும் களத்தில் இல்லாத ஐந்து அரசுப் பள்ளிகளைக் கண்டுபிடித்துத் தருவோருக்குத் தனது சம்பளத்திலிருந்து ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் அறிவித்துள்ளார்.
அங்குள்ள தல்கர் டோலா, மிசிர்பூர், கடான் அர்சானி, உருது பஜார், பாக் ஹாஷிம் ஆகிய ஐந்து தொடக்கப் பள்ளிகளும் அரசுப் பதிவேடுகளில் மட்டுமே செயல்படுவதாகக் காட்டப்படுகின்றன.
இப்பள்ளிகளில் ஆசிரியர்களோ, குழந்தைகளோ, கட்டடங்களோ இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
கட்டடங்கள் இல்லாத பள்ளிகள் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பில் ஏன் செயல்பாட்டில் இருப்பதாகக் காட்டப்படுகின்றன என்பது குறித்து அரசு விசாரணை நடத்தி விளக்கமளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
நொய்டாவில் உள்ள பள்ளி ஒன்றின் சிதிலமடைந்த நிலையைக் காட்டும் காணொளியை வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் உ.பி. தலைவர் பங்கஜ் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கும் எம்.பி. சஞ்சய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.


