புதுடெல்லி: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அரசியல்வாதிகளில் ஒருவர் ராஜா பய்யா என்கிற ரகுராஜ் பிரதாப் சிங்.
பிரதாப்கரைச் சேர்ந்த இவர் 1993ஆம் ஆண்டு முதல் 2018 வரை தொடர்ந்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். உ.பி.யில் ஆட்சிக்கு வரும் கட்சி எதிலும் சேராமலேயே அதன் அமைச்சரவையில் இடம்பெறும் அளவுக்கு அரசியல் செல்வாக்கு கொண்டவர்.
இவ்வாறு, பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் அரசில் அமைச்சராக இருந்தார். 2018ஆம் ஆண்டில் ஜன்சத்தா தளம் என்ற தனிக் கட்சி தொடங்கி அதன் சார்பில் பிரதாப்கர் மாவட்டம் குண்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார்.
ராஜா பய்யா அண்மையில் தனது மாளிகையில் ஆயுத பூசை கொண்டாடினார். அதில் ஏறத்தாழ 200 வகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் இடம்பெற்றிருந்தன. அவற்றைக் காண ஏராளமானோர் கூடினர். அவர்கள் தங்கள் கைப்பேசிகள் மூலம் காணொளி எடுத்த காட்சிகள் இணையத்தில் காட்டுத்தீயைப் போல பரவி பார்ப்பவரைத் திகைக்க வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

