புதுடெல்லி: டெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற நாயகர்கள் மாநாட்டை, அடுத்த வாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன், கனடா, இந்தியா உட்பட 56 நாடுகள் அங்கம் வகிக்கும் காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற நாயகர்கள் அமைப்பை, கடந்த 1969ஆம் ஆண்டு கனடாவின் அப்போதைய நாடாளுமன்ற நாயகர் லுசியன் லாமரெக்ஸ் உருவாக்கினார்.
நாயகர்கள், அவைத் தலைவர்கள் நாடாளுமன்றத்தை பாரபட்சமின்றி நடத்துவது, நேர்மையாக நடத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பிரான்ஸ் கடல் பகுதியில் அமைந்துள்ள குரென்சீ தீவில் காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற நாயகர்கள் மாநாடு நடைபெற்றது.
அதில் பங்கேற்ற இந்திய நாயகர் ஓம் பிர்லா, 2026ல் நடைபெறும் மாநாட்டில் செயற்கை நுண்ணறிவை நாடாளுமன்றத்தில் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று பேசியிருந்தார்.
28வது காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற நாயகர்கள் மாநாடு, டெல்லியில் உள்ள சம்விதான் சதனில் (பழைய நாடாளுமன்றக் கட்டடம்) உள்ள மண்டபத்தில் ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை நடக்கவுள்ளது.

