கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் கோல்கா மாவட்டத்தில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 14) தொடக்கிவைத்தார்.
இது உலகின் முதல் மூங்கில் - எத்தனால் ஆலை என அசாம் மாநில செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த ஆலையினால் அசாம் மாநிலத்திற்கு ரூ.200 கோடி லாபம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
வட கிழக்கு மாநிலங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி சனிக்கிழமையன்று மணிப்பூரில் இனமோதலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.
அங்கு இரு வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், ரூ.8,500 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார். மணிப்பூரை முடித்துக்கொண்டு சனிக்கிழமை இரவு அசாம் விரைந்தார் மோடி.
அசாமில் பாரத் ரத்னா விருது பெற்ற மறைந்த பாடகர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டார்.
டாரங் மாவட்டத்தில் ரூ.6,300 கோடி மதிப்பிலான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
கோல்கா மாவட்டத்தில், நுமாலிகர் எனும் இடத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையையும் அவர் தொடங்கிவைத்தார்.
இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நிகர பூஜ்ஜியம் என்பதால் மூங்கிலின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆலையினால் உள்ளூர் பொருளியல் ரூ.200 கோடி லாபம் அடையுமெனவும் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட கிழக்கு மாநிலங்களிலிருந்து இதற்காக 5 லட்சம் டன் பச்சை மூங்கில்கள் கொண்டுவரப்படும் என்பதால், நேரடியாகவும் மறைமுகமாவும் 50,000 மக்கள் பயன்படுவர் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

