புதுடெல்லி: அமைச்சர்கள் அனைவரும் சமூக ஊடகச் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இன்றைய இளையர்கள் சமூக ஊடகத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இயங்கி வருகின்றனர். போலித் தகவல்கள் அவர்களைத் திசைதிருப்புவதைத் தடுக்க அரசுத் தரப்பு துல்லியமான தகவல்களை உடனுக்குடன் வழங்க வேண்டும்.
குறிப்பாக, ‘ஜென்-ஸீ’ தலைமுறையினரைச் சென்றடைய இன்ஸ்டகிராம் தளத்தில் அமைச்சர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசின் நலத்திட்டங்கள் இன்றைய இளம் தலைமுறையினரைச் சென்றடையும் முயற்சியின் ஒரு பகுதியாக, இளையர்களுடன் கலந்துரையாட ஒவ்வொரு நாளும் ஓர் அமைச்சர் ஒரு பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அரசின் திட்டங்கள், பல்வேறு துறைகளின் சாதனைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைப்பதுடன், நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர்களின் கருத்துகளையும் அமைச்சர்கள் கேட்டறிவர். மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, இளையர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் அப்பயணங்களை ஒருங்கிணைப்பார்கள்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மே 1 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலகட்டத்தில் அமைச்சர்களின் சமூக ஊடகச் செயல்பாடுகள் குறித்த ரகசிய ஆய்வறிக்கை அவர்களிடம் வழங்கப்பட்டது.
சமூக ஊடகச் செயல்பாட்டு மதிப்பீட்டுத் தரவரிசையில் மோடி முதலிடம் பிடித்தார். இளைய தலைமுறையினரை சென்றடைய காணொளிகள், நவீன மின்னிலக்க உத்திகளை அவர் தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறார்.


