புதுடெல்லி: இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க அரசுடன் பிரதமர் மோடி சமரசம் செய்துகொண்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பான தகவல்களைத் தாம் வெளியிட்டால் பிரதமர் மோடி பதவி விலக நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஏற்கெனவே இதே குற்றச்சாட்டை இந்திய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவருகின்றன.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் ஒருவர் தமது சமூக ஊடகப் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது புது விவாதங்களை எழுப்பியுள்ளது.
மூன்றாவது முறையாகப் பிரதமராகி இருக்கும் மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பைப் பார்த்து ஏன் அஞ்சுகிறார் என்பது தெரியவில்லை என்று சு.சுவாமி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள் சிலர், பிரதமர் மோடி அந்நாட்டு அரசுடன் சமரசம் செய்துகொண்டதாகக் கூறுவதாகவும் அந்தத் தகவல்கள் திரு மோடியின் பிரதமர் பதவிக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் சு.சுவாமி கூறியுள்ளார்.
எனினும், தாம் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

