புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது பாதுகாப்புக்காகப் பின்தொடர்ந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கணிசமான அளவில் குறைத்திருப்பதாக அரசாங்கத் தரப்பு தகவல் ஒன்று புதன்கிழமை (மே 13) தெரிவித்தது.
ஈரான் போர் காரணமாக எரிசக்தி விலைகள் ஏற்றம் கண்டு வருவதால் பொதுமக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு திரு மோடி வலியுறுத்திய ஒருசில நாளில் அவரே சிக்கன நடவடிக்கையில் இறங்கிவிட்டதாகக் கூறப்பட்டது.
திரு மோடியின் வாகனத்தொடரில் இடம்பெற்ற வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானபோதிலும், குறைக்கப்பட்ட பின்னர் அதன் அளவு குறித்து எந்தத் தகவலும் இல்லை. முன்னதாக, அந்த வாகனத்தொடரில் ஏறத்தாழ ஒரு டஜன் வாகனங்கள் இருந்தன.
வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும், பிரதமருக்குப் பாதுகாப்பு அளிக்கும் ‘சிறப்புப் பாதுகாப்புப் படை’யின் நெறிமுறைகளுக்கு இணங்க, அத்தியாவசியப் பாதுகாப்பு அம்சங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவித்தது.
நாட்டிலேயே ஆக உயர்மட்ட பாதுகாப்பை திரு மோடி பெற்றுள்ளார். இந்த வாரம் தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கும் வடகிழக்கு மாநிலமான அசாமிற்கும் மேற்கொண்ட பயணங்களின்போது அவர் தனது வாகனத் தொடரின் அளவைக் குறைத்துவிட்டதாகக் கூறப்பட்டது.
தேவையான இடங்களில் தனது வாகனத்தொடரில் மின்சார வாகனங்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் அதேநேரம் புதிதாக வாகனங்களை வாங்கவேண்டாம் என்றும் பிரதமர் கூறியதாகவும் அத்தகவல் தெரிவித்தது.

