புதுடெல்லி: கனடா ஜூன் 15 முதல் 17 வரை ஏற்று நடத்தவுள்ள ஜி7 உச்சநிலை மாநாட்டில், ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அநேகமாகப் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.
ஆல்பெர்ட்டாவில் நடைபெறும் மாநாட்டிற்காக கனடாவிடமிருந்து திரு மோடிக்கு இன்னும் அதிகாரபூர்வமாக அழைப்பு வரவில்லை. ஆனாலும், காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவின் கவலை குறித்து புதிய கனடிய அரசாங்கம் கவனம் செலுத்துமா என்பது பற்றி இந்தியாவுக்கு உறுதியாகத் தெரியாத வேளையில், திரு மோடி கனடாவுக்குப் பயணம் செய்ய மாட்டார் எனக் கூறப்படுகிறது.
மாநாட்டில் பங்கேற்க திரு மோடிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்பது பற்றி கனடிய ஜி7 பேச்சாளர் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தவில்லை.
ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பெயர்களை கனடா இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், கனடிய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி ஆஸ்திரேலிய, உக்ரேனிய, தென்னாப்பிரிக்க, பிரேசிலியத் தலைவர்களை கனடா அழைத்துள்ளதாகத் தெரிகிறது.