மும்பை: தேர்தலில் பாஜக வெற்றிபெறும் விதம் இந்தியாவுக்கு நல்லதல்ல என்று ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியின் மூத்த பிரமுகர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எழுதியுள்ள புத்தகத்தின் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கெஜ்ரிவால், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்றார்.
மோடியும் அமித்ஷாவும் விடைபெற உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சஞ்சய் ராவத் எழுதியுள்ள ‘அன்லைக்லி பாரடைஸ்’ என்ற புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தேர்தல் ஆணையத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவர்கள் (பாஜக) தேர்தலில் வெற்றி பெறுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
மோடி அரசு நேர்மையற்றவர்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டு, நேர்மையானவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்கிறது என்றார் திரு கெஜ்ரிவால்.
“ஒரு காலத்தில், மோடிக்கு எதிரான ‘மீம்ஸ்’களைப் பதிவிட்டதற்காகக் கூட மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று, சமூக ஊடகங்கள் விமர்சனங்களால் நிரம்பி வழிகின்றன, இது அவரது செல்வாக்கில் ஏற்பட்ட சரிவைப் பிரதிபலிக்கிறது,” என்று கெஜ்ரிவால் கூறினார்.
ஊழல் மூலம் தேர்தல்களில் வெற்றி பெறப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், தனது சொந்த அனுபவத்தையே இதற்கு உதாரணமாகக் கூறலாம் என்றார்.

