புதுடெல்லி: இவ்வாண்டு ஜூலை மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஃபேஸ்புக் பதிவைச் சிறிது நேரம் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தியதற்காக மெட்டா நிறுவனத்தின் அனைத்துலக விவகாரத் தலைவர் ஜோயல் கப்லான் இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘செயல்பாட்டுக் கோளாறு காரணமாகவே பிரதமரின் பதிவு தவறுதலாக முடக்கப்பட்டதாக’ கப்லான் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கு இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அழைப்பாணை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், பிரதமர் மோடியின் உரை ஃபேஸ்புக் தளத்திலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் மூன்று நாள்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற நிலைக்குழுவும் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) வலியுறுத்தியிருந்தது.
இதனிடையே, ஹைதராபாத்தில் பிரதமரை இழிவுபடுத்தும் வகையிலான காணொளிகள் ஃபேஸ்புக்கில் வெளியானதை அடுத்து, மெட்டா இந்தியாவின் தலைவர் அருண் ஸ்ரீநிவாஸ்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
‘நீட்’ மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததால் இந்தியக் கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து, இளையர்கள் நடத்திய போராட்டங்களின்போது அத்தகைய காணொளிகள் பரவின.
இதற்கிடையே, சிறுவர் பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம், வன்போலிக் காணொளிகள், நிறுவனத் தளங்களின் செயல்பாட்டுக் குறைபாடுகள் போன்றவை தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் மன்னிப்பு கோரியதாகத் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
சிறார் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதில் ‘அறவே சகித்துக்கொள்ள இயலாத’ கொள்கையைக் கொண்டுள்ளதாகவும், தங்களின் கண்டறியும் முறைகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகவும் மெட்டா தெரிவித்துள்ளதாக ‘பிபிசி’ செய்தி கூறியது.


