புதுடெல்லி: புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலின் கருவறைக்குள் குரங்கு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இவ்வாரம் திங்கட்கிழமை (ஜனவரி 22) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 5.50 மணியளவில் கோவிலின் தெற்கு வாயில் வழியாக நுழைந்த ஒரு குரங்கு, கருவறைக்குள் புகுந்தது. அது ராமர் சிலைக்கு அருகே சென்றது.
இதனால் பதற்றமடைந்த பாதுகாவலர்கள், குரங்கு இறைவனின் சிலையைச் சேதப்படுத்திவிடப் போகிறதே என முதலில் கவலைப்பட்டு உள்ளே ஓடியதாக ராம ஜென்மபூமி கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால், அக்குரங்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாமல், கருவறையைக் கடந்து, வடக்கு வாயிலை நோக்கிச் சென்றது. அந்த வாயில் மூடப்பட்டிருந்ததைக் கண்டதும், பின்னர் கிழக்கு நோக்கி அது திரும்பியது.
அங்கு திரளாகக் கூடியிருந்த பக்தர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கிழக்கு வாயில் வழியாக அது வெளியேறியது.
ராமபிரானின் ஆசி பெறவும், அவருக்குத் தொடர்ந்து காவலாக இருக்கவும் அனுமார் வந்துவிட்டதாக இந்நிகழ்வை பக்தர்கள் பலரும் உருவகப்படுத்திக் கூறினர்.