அமெரிக்காவில் பல முன்னணி நிறுவனங்களில் வேலை செய்துவரும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் பலர் இந்தியாவிற்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
ஆட்குறைப்பு, வேலைப்பளு, வாழ்க்கைச்செலவினம், வருமானவரி உயர்வு போன்ற காரணங்கள் அவர்களை
சொந்த ஊர்களுக்கு மீண்டும் செல்ல தூண்டுகிறது.
ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்ட சிலர் அங்கேயே வேறு வேலை தேடாமல் இந்தியா திரும்புகின்றனர். அத்தகையோரில் ஒருவர் திருநெல்வேலியைச் சேர்ந்த 37 வயது சாந்தினேஷ் குமார் நாகேந்திரன்.
“கலிஃபோர்னியாவில் ஆண்டிற்கு 240,000 வெள்ளி ஊதியம், சொந்தவீடு என பல வசதிகள் இருந்தாலும் இந்தியாவில் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ந்து வருகிறது. “
“அமெரிக்காவில் கிடைக்கும் அதே வாழ்க்கையை தற்போது இந்தியாவிலும் வாழ முடியும். சம்பளம் குறைவு என்றாலும் மனநிம்மதி அதிகம்,” என்றார் திரு சாந்தினேஷ்.
இவரைப் போலவே சான் ஃபிரான்சிஸ்கோவில் வேலைசெய்து தற்போது பெங்களூரில் வாழ்கிறார் 35 வயது மனு துண்டி.
“இந்தியாவிலும் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் தங்களது கிளைகளைத் துவங்கியுள்ளன. அமெரிக்காவில் வேலை செய்தபோது விசா தொடர்பாக எப்போதுமே ஒரு பதற்றம் இருக்கும். ஆனால் இங்கு அந்த பிரச்சினை இல்லை. அதனால் மீண்டும் இந்தியா திரும்பிவிட்டேன்,” என்றார் திரு மனு.
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியவர்களுக்காக ஃபேஸ்புக்கில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் தற்போது கிட்டத்தட்ட 15,600 பேர் உறுப்பினர்களஆ உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக அக்குழுவில் இணைவோரின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிவருகிறது.
அண்மையில் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 200,000க்கும் அதிகமானோர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். அவர்களில் மூவரில் ஒருவர் இந்தியர் எனக் கூறப்பட்டது.