கோல்கத்தா: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி, தன்னுடைய 105 வயது வரை சிறையில் கழித்த நிலையில், இறுதி நாள்களைக் குடும்பத்துடன் இருக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
1920ஆம் ஆண்டு பிறந்தவர் ராசிக் மண்டல். அவர் கடந்த 1988ஆம் ஆண்டு சொத்துப் பிரச்சினை காரணமாகத் தனது சகோதரரைக் கொன்றதாகக் கொலை வழக்கில் கைதாகினார்.
1994ஆம் ஆண்டு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் பிறந்த ராசிக், தன்னுடைய 68 வயதில் கைதாகி, சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார்.
ஆயுள் தண்டனைக்கு ரத்துக் கோரிய மனுவை 2018ஆம் ஆண்டு கோல்கத்தா நீதிமன்றமும், 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தன.
ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ராசிக், வயது முதுமை காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சீர்திருத்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில்தான், ராசிக்கின் மகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இன்னும் அவர் உயிருடன் இருக்கிறாரா?, அவரை ஏன் இடைக்கால சிறைவிடுப்பில் விடுவிக்க வேண்டும்?, நிரந்தரமாக விடுதலை செய்து விடலாம். இருக்கப்போகும் சிறிது காலத்தை அவர் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கட்டும்,” என்று கூறி விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.


