புனே: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த புனே நகரில் செவ்வாய்க்கிழமை (மே 20) வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட அரங்கில் நடத்தப்பட்ட இந்துத் திருமணத்திற்கு இடையூறு விளைவித்தது கனமழை.
எதிர்பாராமல் பெய்த மழையால் அங்குக் குழப்பம் நிலவியது.
அந்த இடத்திற்கு அருகே அமைந்துள்ள அரங்கில் முஸ்லிம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
கனமழையால் இந்துத் திருமணத்தின் மணமக்கள் சன்ஸ்கிருதி கவாடே பட்டீலும் நரேந்திர கலாண்டே பட்டீலும் ‘சப்தபதி’ எனும் பாரம்பரியச் சடங்கை நிறைவுசெய்ய இயலவில்லை.
எனவே, அந்த அரங்கைப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று முஸ்லிம் மணமக்கள் வீட்டாரிடம் பட்டீல் குடும்பத்தினர் கேட்டனர்.
அதற்கு ஒப்புக்கொண்டதுடன் மேடையில் ‘சப்தபதி’ சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் முஸ்லிம் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களும் உதவியதாகக் கூறப்பட்டது.
திருமணச் சடங்குகள் இரு சமயங்களின் பாரம்பரியத்துக்கும் முழுமையான மரியாதை செலுத்தும் வகையில் நிறைவுபெற்றதாகப் பட்டீல் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார்.
சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை எடுத்துக்கூறிய, நினைவில் நிற்கும் இந்நிகழ்ச்சியில், புதிதாகத் திருமணம் செய்துகொண்ட மஹீன் - மொஹ்சின் காஸி இணையும் சன்ஸ்கிருதி - நரேந்திரா பட்டீல் இணையும் மேடையில் ஒரே நேரத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.