மும்பை: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியைப் ‘போலி சிவசேனா’ எனக் குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார்.
“மராட்டிய மண்ணின் மக்களுக்காகப் போராடுவதற்காக பால் தாக்கரே சிவசேனா கட்சியைத் தொடங்கினார். அதனைப் போலி என்கிறார் பிரதமர். எங்கள் கட்சியைப் போலி என்று கூறுவதற்கு இது ஒன்றும் உங்களது பட்டமன்று,” என்று தாக்கரே சாடினார்.
பிரதமர் மோடியின் பட்டச் சான்றிதழ் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், உத்தவ் தாக்கரே மீண்டும் அதனைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணி 300 தொகுதிகளுக்குமேல் வெல்லும் என்றும் உத்தவ் கூறினார்.
மும்பை அருகே போய்சரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு சொன்னார்.
மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு, நல்ல திட்டங்களை எல்லாம் குஜராத்திற்குத் தந்துவிட்டு, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் திட்டங்களை மகாராஷ்டிராவிற்குத் தள்ளிவிடுகிறது என்றும் உத்தவ் குற்றம் சுமத்தினார்.
தாங்கள் வெற்றிபெற்றால், பால்கரில் இடம்பெறவிருக்கும் வத்வான் துறைமுகத் திட்டத்தைக் கைவிடுவோம் என்றும் அவர் உறுதியளித்தார். அத்துறைமுகத் திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.