பாட்னா: பீகாரில் உள்ள கயா நகரம் ‘கயா ஜி’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தின் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பீகாரின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். சித்தார்த், “உள்ளூர் உணர்வுகள், நகரத்தின் வரலாறு மற்றும் சமய முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா மகிழ்ச்சி தெரிவித்தார். பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத்தும் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
கயா நகரம் அதன் சமயம் முக்கியத்துவத்திற்குப் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ‘பித்ரபக்ஷ’ காலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான மக்கள் கயாவிற்கு வருகிறார்கள்.
கயாவில் உள்ள புத்தகயா, உலகின் மிக முக்கியமான மற்றும் புனிதமான புத்த யாத்திரை மையங்களில் ஒன்றாகும். இங்குதான் போதி மரத்தின் அடியில் கௌதமர் புத்தராக மாறுவதற்கான ஞானத்தைப் பெற்றார்.

