பகல்பூர்: பீகார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தானியப் பெண்கள் இருவரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதை இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து 1956ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானியப் பெண்கள் இருவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் பீகாரில் மேற்கொண்ட தீவிர வாக்காளர் திருத்தப் பணியின்போது அவர்கள் இருவரின் வாக்காளர் அட்டைகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் இவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று தெரியவந்துள்ளது.
மேலும், தற்போது அவர்கள் வயது மூத்தவர்களாக இருப்பதாலும் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளின்போது அவர்களால் சரியான தகவல்களை அளிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் இருவரின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
‘‘மத்திய உள்துறை அமைச்சிடமிருந்து எங்களுக்கு கிடைத்த சில தகவல்களைச் சரிபார்த்தபோது, அந்த இருவரும் பாகிஸ்தானியர்கள் என்பது உறுதியானது. அதன்பிறகு அவர்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’’ என்று பகல்பூர் மாவட்ட ஆட்சியர் நவல் கிஷோர் சவுத்ரி கூறும்போது தெரிவித்தார்.