புதுடெல்லி: அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியக் கடற்படைப் போர்க்கப்பல்கள் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கடற்படை வெளியிட்டுள்ள பதிவில், போர்க்கப்பல்களிலிருந்து அச்சுறுத்தல்களாக வரும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணை ஒத்திகையை இந்தியக் கடற்படைப் போர்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளன.
தொலைதூர இலக்கை தாக்கும் நடவடிக்கைகளுக்கு கடற்படைத் தளவாடங்கள் தயார்நிலையில் உள்ளன. இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்ய, எவ்வித அச்சுறுத்தல்கள் எந்நேரம் எந்த வகையில் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள கடற்படை தயார்நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடல்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளவும் சண்டையிடவும் கடற்படை தயார்நிலையில் இருப்பதை மேற்கண்ட ஒத்திகை வெளிக்காட்டுகின்றது.

