தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மார்ச் 2026க்குள் நக்சலிசத்தை ஒழிக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா

2 mins read
36d5556f-80d8-4bd0-b82b-89699f195dbe
சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படைகள் நக்சலிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, கடந்த ஓராண்டில் நக்ஸல்களுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (நடுவில்) கூறினார். - படம்: இந்திய ஊடகம்

ராய்ப்பூர்: 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க, அனைத்து பாதுகாப்புப் படைகளும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

நக்சல் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான சத்தீஸ்கரில் பாதுகாப்பு தொடர்பான உயர் ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை (டிசம்பர் 16) நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய், துணை முதல்வர் விஜய் ஷர்மா, மத்திய உள்துறைச் செயலர் கோவிந்த் மோகன், சத்தீஸ்கரின் தலைமைச் செயலர், காவல்துறை தலைவர் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதத்தின் நிலைமை குறித்து மதிப்பிடப்பட்டது. அப்போது பேசிய அமித் ஷா, “சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படைகள் நக்சலிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, கடந்த ஓராண்டில் நக்சல்களுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இது மிகப்பெரிய வெற்றியாகும்.

“வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் நக்சலைட்டுகளின் மன உறுதியை உடைத்ததோடு, சிவில் உரிமைகள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சிறப்புத் தொகுப்புகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களைப் பிரதான நீரோட்டத்தில் மோடி அரசு சேர்க்கிறது. வரும் நாள்களில் சத்தீஸ்கர் நக்சலிசத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு வளர்ச்சிப் பணிகளில் நாட்டின் முன்னணி மாநிலமாக மாறப்போகிறது,” என்றார்.

“2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் இலக்கை அடைய அனைத்துப் படைகளும் அமைப்புகளும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த முயற்சியில் தேசியப் புலனாய்வு அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கும்,” என்று திரு அமித் ஷா மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்