காத்மாண்டு: இந்தியா-நேப்பாள எல்லைப் பூசல் புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது.
இந்தியா மட்டுமன்றி, நேப்பாளமும் இந்தியாவின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக நேப்பாளப் பிரதமர் பாலேந்திர ஷா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்ச்சைக்குரிய காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய எல்லை விவகாரங்கள் குறித்து இந்தியாவுக்கு அரசதந்திரக் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேப்பாளப் பிரதமரின் அக்கருத்து உலகளவில் பெரும் பேசுப் பொருளாக மாறியுள்ளது.
எல்லைப் பிரச்சினைக்குச் சுமுகத் தீர்வு காண, வரலாற்று ஆய்வாளர்கள் உதவியுடன் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தச் சம்மதித்துள்ளன.
இதுகுறித்து சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் நேப்பாள அரசு ஆலோசித்துள்ளது.
இருப்பினும், நேப்பாளப் பிரதமரின் இந்த மாறுபட்ட கருத்து, நேப்பாள மக்கள், அரசியல் ஆய்வாளர்கள் ஆகியோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய எல்லையை நேப்பாளம் ஆக்கிரமித்ததாக எந்த ஒரு வரலாற்றுச் சான்றும் இல்லை என அந்நாட்டின் முன்னாள் தூதர்களும் எல்லை நிபுணர்களும் பிரதமர் ஷாவின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
எல்லையில் தூண்கள் சரியாகத் தெரியாததால், இரு நாட்டு விவசாயிகளும் நிலங்களை மாற்றிப் பயன்படுத்துகிறார்களே தவிர, நேப்பாள அரசு ஆக்கிரமிக்கவில்லை என அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை வழித்தடச் சலசலப்புக்கு இடையே, ஷாவின் இப்பேச்சு அனைத்துலக அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.

