ஆம்ஸ்டர்டாம்: 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்’ பல ஆண்டுகால தூதரக முயற்சிகளுக்குப் பிறகு இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்திற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் அவை சனிக்கிழமை (மே 16) வழங்கப்பட்டன.
முதலாம் ராஜராஜ சோழன், அவரது மகன் ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த அந்தப் பட்டயங்கள், இந்தியாவின் எல்லைக்கு வெளியே பாதுகாக்கப்பட்ட மிக முக்கிய தமிழ்ப் பாரம்பரியச் சின்னமாகும்.
ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்களின் வரலாற்று முக்கியத்துவம்
தற்போதைய இந்தோனீசியப் பகுதியான ஸ்ரீவிஜய நாட்டு அரசர் நாகப்பட்டினத்தில் கட்டிய ‘சூடாமணி விகாரம்’ என்ற பௌத்த மடாலயத்திற்கு, ஆனைமங்கலம் கிராமத்தின் நில வருவாயைக் கொடையாக வழங்கியதை இந்த 30 கிலோ எடையுள்ள செப்புப் பட்டயங்கள் ஆவணப்படுத்துகின்றன.
சோழர்களின் கடல்சார் வணிகம், பிற மதங்களை ஆதரித்த சமய நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு இது மிக அரிதான முதன்மை ஆதாரமாகும்.
18ஆம் நூற்றாண்டில் டச்சு கிழக்கிந்திய கம்பெனியால் நெதர்லாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இப்பட்டயங்கள், லைடன் பல்கலைக்கழக நூலகத்தில் 300 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டன.
புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலிலும் இவை இடம்பெற்றுள்ளன.
14 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த இந்திய அரசின் தொடர் தூதரக முயற்சிகள், யுனெஸ்கோ (UNESCO) வழிகாட்டுதலின்படி, டச்சு அரசு இவற்றைத் திருப்பி அளிக்க முடிவு செய்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மீட்பு, தமிழகத்தின் சோழர் காலப் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

