புனே: மகாராஷ்டிராவில் குய்லின்-பார் சிண்ட்ரோம் (ஜிபிஎஸ்) என்ற நரம்பியல் கோளாறு நோயின் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது.
இதுபற்றி மகாராஷ்டிர சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நோய் தொடர்பாக இதுவரை 192 பேருக்கு பாதிப்புக்கான சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 167 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த நோயால் 7 பேர் மாண்டனர். அவர்களில் ஒருவருக்கு இந்த ஜிபிஎஸ் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்ற 6 பேரின் நிலையும் சந்தேக பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், 48 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 21 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
91 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஜிபிஎஸ் நோய் மாசுபட்ட தண்ணீரில் உருவாகி நோயாளிகளை பலவீனப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இதனால், நோயாளிகளின் நரம்பு மண்டலம் பாதிக்க தொடங்கி, தசை பலவீனம், முடக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகளும் ஏற்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.