மும்பை கோவில் லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் சுண்டெலிகள் இருந்ததாக புதிய சர்ச்சை

1 mins read
73bef190-1f9f-48b5-bb89-6ea1349f56c1
லட்டு உறைகளில் எலிகள் இருந்ததாகக் கூறப்படுவதை கோயில் நிர்வாகம் உறுதிப்படுத்தவில்லை. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் நெய்யில் கலப்படம் செய்து இருப்பது உறுதியானது.

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாத பாக்கெட் வைக்கப்பட்டு இருந்த தட்டு, லட்டு பாக்கெட்டுகளை எலிகள் கடித்து சேதப்படுத்தி இருப்பதையும் அதில் சுண்டெலிகள் கிடப்பதையும் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளி குறித்துப் பேசிய கோவில் அறக்கட்டளை தலைவரும் சிவசேனா எம்.எல்.ஏ.வுமான சதாசர்வன்கர், காணொளியில் காட்டப்படும் இடம் அசுத்தமாக உள்ளது. அந்த வீடியோ கோவிலில் எடுக்கப்பட்டது அல்ல. வெளியில் வேறு இடத்தில் காணொளி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்படும். மேலும் இந்த விவகாரம் குறித்து துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்