புதுடெல்லி: கடந்த ஓராண்டு காலமாக கொரோனா கிருமி பல ரகமாக உருமாற்றம் கண்டு, மக்களிடையே எளிதில் பரவக்கூடிய தன்மை கொண்டதாக விளங்கியுள்ளது.
அந்த வரிசையில், அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த 'சார்ஸ்-கொரோனா கிருமி 2' மேலும் உருமாறி, 'டெல்டா பிளஸ்' ஆக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த வகை, இந்தியாவில் தற்போது குறைவாகவே காணப்படுவதால் உடனடி கவலைக்கு அவசியம் இல்லை என்றும் கூறுகின்றனர்.
முதன் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, மிக மோசமான 2-வது அலைக்கு முக்கிய காரணமான 'டெல்டா' வகை கொரோனா கிருமி மேலும் உருமாறி புதிய 'டெல்டா பிளஸ்' வகையாக தோன்றியுள்ளது.
தற்போதைய புதிய மாற்றம், சார்ஸ்-கொரோனா கிருமி 2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழையவும், பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த புதுவகை கிருமிக்கு உதவுவதாகவும் டெல்லியில் உள்ள மரபியல் , ஒருங்கிணைப்பு உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா கூறுகிறார்.
இப்போது புதிதாக மாற்றம் அடைந்துள்ள கொரோனா வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை என்றாலும், அதைத்தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம் என்பதே விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.

