புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
அதில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 விழுக்காட்டினர் வீட்டிலிருந்து பணியாற்றுவது குறித்துப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக டிசம்பர் 10ஆம் தேதிமுதல் ஜனவரி 20ஆம் தேதிவரை காற்று மாசுபாடு உச்சத்தை எட்டும். அந்தக் காலகட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
மேலும், பெட்ரோல் விநியோகத்துக்கும் சாலையில் வாகனங்கள் இயங்கவும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளன.
கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்கள் வாழும் புதுடெல்லி, உலகின் மாசடைந்த நகரங்களுக்கான பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
டெல்லியில் குளிர்காலத்தின்போது காற்றுத் தூய்மைக்கேடு அதிகமாக இருக்கும். காற்றில் அடர்ந்த பனி இருப்பதால் புகை மேலே செல்லாமல் நிலத்திற்கு அருகேயே சுற்றிவரும். இது சுகாதாரச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
2022-2024 ஆண்டுகளில் சுவாச நோயால் பாதிக்கப்பட்ட பலரும் டெல்லியில் உள்ள ஆறு அரசாங்க மருத்துவமனைகளை சிகிச்சைக்காக நாடினர். அந்தக் காலகட்டத்தில் ஏறக்குறைய 30,000 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

