கெளகாத்தி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்த தனது நிலைப்பாட்டை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திரு சர்மா, செய்தியாளர்களிடம் கூறுகையில், “அசாமில் மாட்டிறைச்சி சாப்பிடும் முஸ்லிம் சமூகம் பெரிய அளவில் உள்ளது. அவர்களைச் சாப்பிட வேண்டாம் என்று எங்கள் கட்சி சொல்லவில்லை. உங்கள் வீடுகளுக்குள் வைத்துச் சாப்பிடுங்கள், பொது இடங்களில் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். மாட்டிறைச்சி உண்ணத் தடை ஏதும் இல்லை,”என்றார் அவர்.
இதற்கு முன்னர் திரு சர்மா, மாட்டிறைச்சி சாப்பிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது தனது கருத்தை மாற்றியுள்ளார்.
முதல்வர் சர்மாவின் கருத்தைச் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார். ‘எக்ஸ்’ தளத்தில், “பாஜகவை அகற்றுவோம், கோமாதாவை பாதுகாப்போம்” என்று அகிலேஷ் யாதவ் பதிவிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியும் முதல்வர் சர்மாவை விமர்சனம் செய்துள்ளது. தனது நிலைப்பாட்டில் இருந்து சர்மா பின்வாங்கி விட்டதாக அது கூறியுள்ளது.


