புதுடெல்லி: அறிமுகம் செய்யப்பட இருக்கும் தொகுதி மறுவரையறையால் எந்தவொரு மாநிலமும் இழப்பைச் சந்திக்காது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுனராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றச் சிறப்பு அமர்வுக் கூட்டம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) தொடங்கியுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேசத் தொகுதிகள் மறுவரையறைத் திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.
அந்த மூன்று மசோதாக்கள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், “நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
“மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 விழுக்காடு அதிகரிப்பு இருக்கும். இதன் மூலம், நாடாளுமன்றத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 815ஆக உயரும். இதில், 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
“இது, அவையின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும். மேலும், எந்தவொரு மாநிலமும் தனது தற்போதைய பிரதிநிதித்துவத்தை இழந்துவிடாது.
“மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, அதைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறைப் பணிகளுக்குப் பின்னரே மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, இந்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) மாலை 4 மணிக்கு நடைபெறும் என்றும் அதுவரை மசோதாக்கள் மீதான விவாதம் தொடரும் என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

