அமராவதி: ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
“ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் ஆன்மிகம் செழித்தோங்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும், அதனால் ஈர்க்கப்பட்டு அவர்கள் மீண்டும் மீண்டும் கோவில்களுக்கு வர வேண்டும். கோவில்களும் அதன் சுற்றுப்புறங்களும் மிகவும் தூய்மையாக இருப்பது அவசியம்,” என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
கோயில் பிரசாதம், அன்னதானம் ஆகியவை மிகவும் தரமாக இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்து கோவில்களில் வேற்று மதத்தினருக்கு பணி வழங்கப்படாது. ஆந்திராவில் உள்ள 1,110 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இனி ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும் இரண்டு உறுப்பினர்கள் அதிகரிக்கப்படுவர்,” என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.

