புவனேஸ்வர்: இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சோதிடர்களுக்கும் பூசாரிகளுக்கும் அதிகத் தேவை நிலவுகிறது.
வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற தங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் உள்ள செல்வாக்கை, ஆதரவை மட்டும் நம்பியிராமல் சோதிடத்தையும் நாடுவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எந்த நாளில், எந்த நேரத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம், அப்போது என்ன நிறத்தில் உடை உடுத்தியிருக்கலாம், எந்த வாகனத்தில் செல்லலாம், எந்தத் திசையில் செல்லலாம் என எல்லாவற்றுக்கும் சோதிடர்களிடம் அவர்கள் ஆலோசனை கேட்கின்றனர்.
இப்படி நாள், நேரம், திசை, வண்ணம் என்பதோடு நின்றுவிடாமல், அரசியல்வாதிகள் பலரும் சிறப்புப் பூசைகளையும் செய்துவருகின்றனர்.
“தேர்தலில் வெல்ல கோள்களின் நிலையும் முக்கியம். வேட்பாளர்களின் பிறப்பியத்தின் (ஜாதகம்) அடிப்படையில் நாங்கள் தீர்வுகளை வழங்குகின்றோம்,” என்றார், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த தீபக் ஆச்சார்யா என்ற சோதிடர்.
தேர்தலில் வெல்வதற்குப் பிறப்பியத்தில் தங்களுக்குள்ள தடைகளை விலக்கவும் பரிகாரம் செய்யவும் அரசியல்வாதிகள் லட்சக்கணக்கில் செலவிடுவதாகச் சோதிடர்கள் கூறுகின்றனர்.
“தேர்தலில் வெற்றிபெற, கிட்டத்தட்ட 99% அரசியல்வாதிகள் வெவ்வேறு வகையான பூசைகளைச் செய்கின்றனர். சில பூசைகள் மாதக்கணக்கில் நீடிக்கின்றன. அவர்கள் பரப்புரையில் பரபரப்பாக இருப்பதால், தங்களுக்குப் பதிலாக தங்களுக்கு நெருக்கமானவர் அல்லது குடும்ப உறுப்பினரை அவர்கள் பூசையில் அமரச் செய்கின்றனர்,” என்று புகழ்பெற்ற சோதிடரும் வாஸ்து ஆலோசகருமான திரிநந்தன் மிஸ்ரா தெரிவித்தார்.
கடந்த 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களின்போது தன்னிடம் வந்த பலரும் வெற்றிபெற்றதை அடுத்து, இம்முறை ஒடிசாவிலும் மற்ற மாநிலங்களிலுமாக கிட்டத்தட்ட 80 வேட்பாளர்களுக்காகத் தான் சிறப்புப் பூசைகள் செய்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.
“சிறப்புப் பூசைகள் மட்டுமின்றி, ராசிக்கல், எண்சோதிடம் என மற்ற வகை சோதிடங்களையும் அரசியல்வாதிகள் அதிகம் நாடி வருகின்றனர். சோதிடர்களை ஆலோசித்தபின் அவர்கள் தங்கள் மோதிர விரலில் சிறப்பு ராசிக்கல் மோதிரங்களை அணிகின்றனர். அவசரம் எனில், கூடுதல் பணம் கொடுக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர்,” என்றார் புவனேஸ்வரைச் சேர்ந்த ராசிக்கல் வணிகர் சுப்ரத் பாந்தா.