புதுடெல்லி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் ஒருவர், டெல்லியில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார்.
டெல்லி சாணக்கியபுரி பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திரவிடுதி ஒன்றில், தனியார் நிறுவனமொன்றின் தலைமை நிர்வாக அதிகாரி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அப்பெண் அளித்த புகாரையடுத்து, காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
கடந்த 2023 செப்டம்பர் 14ஆம் தேதி, அப்பெண்ணுக்கு இக்கொடுமை நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த ஆடவர் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் நிறுவனத்தில் தான் உதவித் தலைமை மேலாளராகப் பணியாற்றி வந்ததாக அப்பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தன் உறவினருக்கு அந்த ஆடவரைத் தெரியும் என்றும் தனக்கு அவ்வேலை கிடைக்க அவர் உதவினார் என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்துவருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.