உச்ச நீதிமன்றத்தின் ஏவுகணைத் தாக்குதல்: துணை அதிபர் தன்கர்

2 mins read
1b51bf40-75c7-4054-9dc6-3dd60df4f98d
இந்திய துணை அதிபர் ஜக்தீப் தன்கர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதா, இல்லையா என முடிவு எடுக்க அதிபருக்கே கெடு விதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பது, ஜனநாயக அமைப்புகள் மீது அணு ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பானது என்று இந்திய துணை அதிபர் ஜக்தீப் தன்கர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

சட்ட மசோதாக்கள் தொடர்பில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், அரசுக்கும் நீதித்துறைக்குமான அதிகார வரைமுறை குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கை அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் மசோதாக்கள் பற்றி முடிவெடுக்க வேண்டும் என அதிபருக்கு காலக்கெடு விதித்தது.

இந்நிலையில், புதுடெல்லி மேல்சபை நடத்தும் பயிற்சி வகுப்பு துவக்க விழாவில், துணை அதிபர் ஜக்தீப் தன்கர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார்.

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் எரிந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்து ஒரு வாரமாக யாருக்கும் தெரியாது. ஒரு பத்திரிகை, செய்தி வெளியிட்ட பிறகே தெரிந்தது.

ஆனால், இன்று வரை, முதல் தகவல் அறிக்கைகூட தாக்கல் செய்யவில்லை. ஏனென்றால், நீதிமன்ற உத்தரவு இல்லாமல், நீதிபதி மேல் அதைப் பதிவு செய்ய முடியாது.

சம்பந்தப்பட்ட நீதிபதியை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றினர். மூன்று நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைத்தனர். அது பரிந்துரை வழங்கும்.

அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. இதுவே சராசரி மனிதர்கள் வீட்டில் நடந்திருந்தால், இப்படி விட்டிருப்பரா? சட்டம் பொதுவானது. நீதிபதிகளுக்கு என்று எந்த விலக்கும் கிடையாது. அதிபருக்கும், ஆளுநர்களுக்கும் மட்டுமே அரசியல் சாசனம் விலக்கு அளிக்கிறது.

ஆனால், நீதிபதிகள், சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களைக் கருதுகின்றனர். அவர்களே, புதிதாக சட்டம் இயற்றுகின்றனர். நாடாளுமன்ற அதிகாரத்தில் தலையிடுகின்றனர். தமிழக அரசின் மசோதாக்கள் தொடர்பான வழக்கில், ஆளுநர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதோடு நில்லாமல், அதிபருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். மூன்று மாதங்களில் மசோதா மீது முடிவு எடுக்காவிட்டால், அது சட்டமாகி விடுமாம். சட்டம் இயற்றுவது நாடாளுமன்றத்தின் வேலை. அதை நீதிபதிகள் செய்தால் என்ன அர்த்தம்? அது என்ன, நாடாளுமன்றத்தைவிட சக்தி வாய்ந்ததா என்று திரு தன்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்துக்கு சில சிறப்பு அதிகாரங்களை அரசியல் சாசனத்தின் 142 வது பிரிவு வழங்கியுள்ளது. அதை ஓர் அணு ஏவுகணையாக பயன்படுத்தி, ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துகிறது. அதிபரின் முடிவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று சொல்ல நீதிமன்றத்திற்கு என்ன அதிகாரம் என்று அவர் விளக்கினார்.

அரசு என்பது மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகிறது. அது நாடாளுமன்றத்துக்கும், மக்களுக்கும் பதில் கூற கடமைப்பட்டது. அந்தப் பொறுப்புடைமையே நம்மை வழிநடத்துகிறது. நாடாளுமன்றத்தில் நீங்கள் கேள்வி எழுப்ப முடியும். ஆனால், நாடாளுமன்ற அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக்கொண்டால், யாரை யார் கேள்வி கேட்பது என்று அவர் வினவினார்.

குறிப்புச் சொற்கள்