அமராவதி: இந்தியப் பிரதமரின் மின்சாரப் பேருந்துச் சேவைத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரத்திற்கு நூறு மின்சாரப் பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக அம்மாநிலப் போக்குவரத்து அமைச்சர் மண்டிப்பள்ளி ராம் பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்திற்கு மத்திய அரசு 750 மின்சாரப் பேருந்துகளை வழங்க முன்வந்துள்ளதாக அவர் செய்தியாளரிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
விசாகப்பட்டினத்தை அடுத்து விஜயவாடா, திருப்பதி, குண்டூர் ஆகிய முக்கியமான நகரங்களுக்கும் மின்சாரப் பேருந்துகள் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று குறிப்பிட்ட அமைச்சர், இதற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்புப் பணிகளும் விரைவில் முடிவுக்கு வரும் என்றார்.
பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்குவதிலும் சுற்றுச்சூழல் சார்ந்த மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டி கூறினார்.
மேலும், ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக்கழகம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று குறிப்பிட்ட அவர், மாநில அரசுக்கு அத்தகைய எண்ணம் அறவே இல்லை என்றார்.

