மத்தியப்பிரதேசம்: புதிதாக அமைக்கப்பட்ட சாலை பெயர்ந்து வந்ததால் பெண் அமைச்சர் அதிர்ச்சி அடைந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கடுமையாக எச்சரித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம், ரைகான் தொகுதிக்கு உட்பட்ட சாட்னா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அம்மாநிலத்தின் பெண் அமைச்சரான பிரதிமா பக்ரி ஆய்வுக்காகச் சென்றார்.
அப்போது அவர் சென்ற போடி-மங்காரி பகுதியில் புதிதாகச் சாலை அமைக்கப்பட்டிருந்தது. அந்தச் சாலையில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அந்தச் சாலையின் தரம் குறித்து அறிய, உடனடியாகத் தனது காரில் இருந்து இறங்கினார்.
நேராகச் சாலையின் ஓரத்திற்குச் சென்று, தனது காலால் சாலையை மிதித்தார். அப்போது சாலை பெயர்ந்து வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மீண்டும் தனது காலால் சாலையை மிதிக்க, சாலையின் ஓரம் பெயர்ந்து கொண்டே வந்தது.
இதனால் கடும் கோபம் அடைந்த அவர், “இதுதான் புதிய சாலையின் லட்சணமா?” என்று அதிகாரிகளைக் கடிந்துகொண்டார். மேலும், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
இது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

