லக்னோ: தமிழகத்தைப் போன்று உத்தரப்பிரதேச மாநில அரசும் ஒரு டிரில்லியன் டாலர் பொருளியல் இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்காக இளையர்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான திறன்மேம்பாட்டு பயிற்சிகளுக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
‘புதிய இந்தியாவின் புதிய உத்தரப்பிரதேசம்’ பொருளியல் வளர்ச்சியுடன் புதிய வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஒரு டிரில்லியன் டாலர் இலக்கை அடைவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்வார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“ஒரு டிரில்லியன் பொருளியல் இலக்கை எட்டுவது தொடர்பாக மாதந்தோறும் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆய்வு மேற்கொள்வார். மேலும் 15 நாள்களுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட துறையின் நிர்வாகத் தலைவரும் ஆய்வு செய்வார்.
“அனைத்து நடவடிக்கைகளும் முதல்வர் அலுவலகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இளையர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை பெற வேண்டும்,” என முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வியாழக்கிழமை நடந்த ஆய்வுக்கூட்டத்தின் போது தெரிவித்தார்.