புதுச்சேரி காவல் நிலையங்களில் தமிழில் எஃப்ஐஆர் பதிவுசெய்ய உத்தரவு

1 mins read
879bc637-b7e1-4900-9ae7-63508c253bfe
புதுச்சேரி காவல்துறை தலைமையகம். - கோப்புப்படம்: இந்து

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் கடந்த மே மாதம் டெல்லி சென்றபோது உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது புதிதாக அமல்படுத்தப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்படுவதைக் கண்காணிக்கவும் அதில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் அறிவுரை வழங்கினார். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் வட்டார மொழிகளில் காவல் நிலையங்களில் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காவல் நிலையங்களில் புதுச்சேரி, காரைக்காலில் தமிழிலும் மாகியில் மலையாள மொழியிலும் ஏனாமில் தெலுங்கிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதனை ஒருசில காவல் நிலையங்களைத் தவிர பெரும்பாலான காவல் நிலையங்கள் பின்பற்றாமல் இருந்துவந்தன.

இந்நிலையில், புதுச்சேரி காவல்துறை டிஜிபி ஷாலினி சிங், புதுச்சேரி காவல் நிலையங்களில் தமிழில் எஃப்ஐஆர் பதிவு செய்யவேண்டும் என கண்டிப்புடன் கூறியுள்ளார். எனவே புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்த வட்டாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்வதை அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்