கொழும்பு: டித்வா புயல் காரணமாக கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையில் சிக்கித் தவித்துவந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை இந்திய விமானப் படை மீட்டுள்ளது.
துபாய் உள்ளிட்ட இடங்களிலிருந்து இலங்கை சென்று, அங்கிருந்து இந்தியா திரும்ப இருந்த 150 தமிழர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொழும்பு விமான நிலையத்தில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக உணவின்றித் தவித்து வந்தனர். கொழும்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) காலை இந்திய விமானப் படை விமானம் ஒன்று திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு இயக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையின் ஐஎல்-76, சி-130 வகை விமானங்கள், இலங்கைக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு சென்றிருந்த நிலையில் அதன்மூலம் இலங்கையில் சிக்கித்தவித்த இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டித்வா புயல் காரணமாக இலங்கையில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்; பலரைக் காணவில்லை. ஏறத்தாழ 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தடைந்தன.

