புதுடெல்லி: இந்தியாவில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் கடந்த மூன்று மாதங்களில் நடத்திய தீவிர சோதனையின் விளைவாக குழந்தைத் தொழிலாளர் முறை, கடத்தலில் இருந்து 3,800க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
நாடெங்கிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆணையம், ஜூன் 12 முதல் ஆகஸ்ட் 31 வரை மேற்கொண்ட இந்தச் சிறப்பு நடவடிக்கையின் மூலம், ஆபத்தான தொழிற்கூடங்கள், உணவகங்கள், செங்கல் சூளைகள், வீடுகளில் சட்டவிரோதமாகப் பணியில் அமர்த்தப்பட்டிருந்த சிறார் மீட்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட குழந்தைகளில் பலர் அண்டை மாநிலங்களில் இருந்து வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி ஏமாற்றி அழைத்து வரப்பட்டு, கடுமையான சூழலில் பணிபுரியக் கட்டாயப்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.
குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கிலும், குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, குழந்தைகள் நலக் குழுக்களின் முன் முன்னிலையாக்கப்பட்டு, பிறகு மறுவாழ்வு நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மீண்டும் தங்களது பெற்றோர், குடும்பத்தினருடன் சேர்க்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சிறுவர்களைச் சட்டவிரோதமாகப் பணியில் அமர்த்திய உரிமையாளர்கள் மேலும் குழந்தைக் கடத்தலில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் மீது 575க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.


