பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்திய ரகசிய தகவல்களை அளித்த யூடியூபர் கைது

பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்திய ரகசிய தகவல்களை அளித்த யூடியூபர் கைது

படம்: ஊடகம்

18 May 2025 - 6:11 pm

2 mins read

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்களை வழங்கியது தொடர்பில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட ஆறு பேரைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.

‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் ஒளிவழியை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா, பிரபலமான இடங்கள்குறித்து தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். இதன்மூலம் சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்தியப் பகுதிகள்குறித்த ரகசிய தகவல்களைப் பாகிஸ்தானுடன் பரி மாறிக் கொண்ட குற்றச்சாட்டின் தொடர்பில் ஜோதி மல்ஹோத்ரா, குசாலா, யமீன், தேவிந்தர், அர்மான் உள்ளிட்ட ஆறு பேரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023ல் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். இவருக்கு டெல்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியாகப் பணியாற்றும் டேனிஸ் எனப்படும் எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர், பல பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனங்கள்குறித்து ஜோதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அத்துடன், வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலமும் பாகிஸ்தானியருடன் தொடர்பில் இருந்து வந்துள்ள ஜோதி, சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளார்.

பாகிஸ்தானுக்கான முகவர்களாகவும் ரகசியங்களைக் கொடுப்பவர்களாகவும் நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் இவர்கள் செயல்பட்டு வந்ததைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலி, இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்கிருந்தவாறு பாகிஸ்தான் உளவாளிகளுடன் நெருங்கிப் பழகி பல்வேறு ராணுவத் தகவல்களைக் கொடுத்து வந்துள்ளார் ஜோதி.

இதற்காக ஏராளமான பணத்தையும் அவர் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்