புதுடெல்லி: இந்தியாவுடனான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண, பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
நான்கு நாடுகளுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
காஷ்மீர் விவகாரம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பம் என்றார் அவர்.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், தங்களது அண்டை நாடுகளுடன் வர்த்தக உறவுகளைப் பேணுவது தொடர்பாகவும் பாகிஸ்தான் தயார் என்று ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமரின் இந்த அறிவிப்புக்கு முன்பே, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்புக்கு அறவே இடமில்லை என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில்,
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையை மேற்கொண்டது இந்தியா.
இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தின.
தொடர்புடைய செய்திகள்
இதைச் சமாளிக்க முடியாமல் இந்திய ராணுவத் தளபதியைத் தொடர்புகொண்டு சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது.
இதையடுத்து, நான்கு நாள் நீடித்த தாக்குதல் நடவடிக்கையை இந்திய ராணுவம் நிறுத்திக்கொண்டது.