இஸ்லாமாபாத்: இந்திய விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான தடையை வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதிவரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.
இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட, இயக்கப்படும், இந்தியாவிற்குச் சொந்தமான மற்றும் குத்தகைக்கு எடுக்கப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் சனிக்கிழமை (ஜூலை 18) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ மற்றும் பொது விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு 26 பேரின் உயிரிழப்பிற்குக் காரணமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தியாவும் அந்நாட்டு விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்த தடை விதித்திருந்தது.
பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்கள், விமான நிறுவனங்கள், ராணுவ விமானங்கள் ஆகியவற்றுக்கு அத்தடை பொருந்தும்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் கடுமையான விரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் ஒன்று மற்றொன்றின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

