புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற விவரம் தெரிய வந்துள்ளது.
அதில் கலந்துகொண்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் பெயரை இந்தியா வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது.
அப்போது, பாகிஸ்தானின் லாகூரில் இருந்து 40 கி.மீ., தொலை வில் உள்ள முரிட்கேயில் உள்ள ஜமாத் உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமாக்கப்பட்டது.
அதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அப்துல் மாலிக், காலித், முதாசிர் ஆகியோரின் இறுதிச் சடங்குகள், முரிட்கேயில் பலத்த பாதுகாப்புடன் நடந்தன.
அதில், பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக அந்த பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மார்கஜி முஸ்லிம் லீக்கின் செய்தித் தொடர்பாளர் தபிஸ் கய்யூம் தெரிவித்தார்.
இந்நிலையில், பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பெயர்கள் மற்றும் புகைப்படத்தை இந்திய ஆயுதப் படைகள் வெளியிட்டது.
பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ஃபயாஸ் ஹுசைன், மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான், பிரிகேடியர் முகமது ஃபர்கான், பாகிஸ்தான் பஞ்சாப் எம்எல்ஏ உஸ்மான் அன்வர் ஆகியோர் பங்கேற்றதாக இந்தியத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

