பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் மீண்டும் இந்தியாவுடன் கூடிய சீக்கிரமே இணையும் என்று இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘மேட் இன் இந்தியா’ எனும் திட்டமே இந்தியாவிற்கு மிகப்பெரிய பாதுகாப்பைத் தருகிறது. இந்தத் திறன் நம்மிடம் இருப்பதால்தான் பாகிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கையை எடுக்க முடிந்தது.
தொடக்க நடவடிக்கையாக பயங்கரவாதிகள் பதுங்கும் இடங்களை அழித்தோம். பின்னர் விமானத் தளங்களை குறிவைத்து தாக்கினோம்.
நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே தாக்குதல் தொடுத்திருப்போம். எனினும், அதிகாரத்துடன் கட்டுப்பாடும் இருக்க வேண்டும் என்பதால் நிதானமாகச் செயல்பட்டோம்.
இன்று பயங்கரவாதத்தால் ஏற்படும் தீமை என்ன என்று பாகிஸ்தானுக்குத் தெரிந்திருக்கும். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா செயல்படும் விதத்தை நாங்கள் மாற்றியிருக்கிறோம். இ
னி பாகிஸ்தானுடன் நடக்கும் பேச்சுவார்த்தை பயங்கரவாதம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும். பாகிஸ்தானுடன் வேறு எது பற்றியும் பேச்சுவார்த்தை இருக்காது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் சுயமரியாதை, தங்கள் சுய விருப்ப அடிப்படையில் இந்தியாவுடன் சேரும் நாள் வெகுதொலைவில் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் நம்மவர்கள், நம் குடும்பத்தின் ஒரு பிரிவினர்.
இந்தியப் பிரதமரின் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற தொலைநோக்குப் பார்வையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், என்று ராஜ்நாத் சிங் கூறினார்.