இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை, நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால் பலமான பதிலடி கொடுப்போம் என இந்தியாவிற்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் ‘யாதிர் ஐ பதா’ வெற்றி நினைவிடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் பங்கேற்றுப் பேசினார். அதில், அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியுடன் முப்படைகளின் தளபதிகளும் கலந்துகொண்டனர்.
“யாதிர் ஐ பதா என்பது நமது உறுதிப்பாடு, விடாமுயற்சி, ஆயுதப்படைகளின் ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கிறது,” என்று ஷெரீப் குறிப்பிட்டார்.
“நாட்டைக் காக்கும் சண்டையில் உயிரிழந்த நமது வீரர்களுக்குமான நினைவுச்சின்னம் இது,” என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
“பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால், அமைதியை விரும்புவதைப் பலவீனமாகக் கருதக் கூடாது,” என்றும் அவர் கூறினார்.
“பாதுகாப்பு, நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025ல் கொடுத்ததை விடப் பலமான பதிலடி கொடுப்போம்,” என எச்சரித்தார்.
கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது.
மேலும், ஜம்மு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரையும் இந்தியா கணிசமாகக் குறைத்துள்ளது.
விவசாயத்திற்கும் குடிநீருக்கும் இந்நீரைப் பெருமளவில் பாகிஸ்தான் நம்பியுள்ளது.
எனவே, நீரைத் திறந்துவிடும்படி இந்தியாவுக்குப் பாகிஸ்தான் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


