புதுடெல்லி: பல ஆண்டுகளாக, தான் வளர்த்து வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டை துருக்கி வலுவாக வலியுறுத்த வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த பாகிஸ்தானிடம் உடனடியாக துருக்கி அறிவுறுத்த வேண்டும் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தனது நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் வலிமையாக தெரிவிக்க இந்தியா விரும்புவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் இதுகுறித்து கூறுகையில், அனைத்து வடிவங்களிலும் உருவங்களிலும் வரும் பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று திரள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“இந்தியாவிற்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை ஆதரித்து பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. இந்தியாவிற்கு எதிராக நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.
“இந்தியா பாகிஸ்தான் இடையிலான பிரச்சினை இருதரப்பு ரீதியிலானது என்பதில் உறுதியாக உள்ளோம். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒருசேர நடக்காது என்பதிலும் இந்தியா உறுதியாக இருக்கும்,” என்றார் ரன்தீர் ஜெயிஸ்வால்.
இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியலை பாகிஸ்தானிடம் அளித்துள்ளது எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சீன வெளியுறவு அமைச்சரும் கடந்த 10ஆம் தேதி ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை அஜித் தோவல் எடுத்துக் கூறினார்.
“இந்தியா சீனா இடையிலான உறவானது, பரஸ்பர நம்பிக்கை, மரியாதை அடிப்படையில் அமைந்துள்ளது என்பதை அந்நாடு உணர்ந்துள்ளது,” என்றார் ரன்தீர் ஜெயிஸ்வால்.