புதுடெல்லி: இந்தியாவுக்கு உரிமையுள்ள ஆறுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடையாது என்று இந்தியப் பிரதமர் மோடி வியாழக்கிழமை அன்று (மே 22) தெரிவித்தார்.
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பிறகு இந்தியா, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள். இந்தத் தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் எல்லையோரமுள்ள பயங்கரவாத முகாம்கள்மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தி அழித்ததாக இந்தியா கூறியது.
நதி நீரைப் பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தம் 1960களில் உலக வங்கி பேச்சுவார்த்தைகளில் முடிவு செய்யப்பட்டது.
“ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் விலை கொடுத்தாக வேண்டும், பாகிஸ்தான் ராணுவம் விலை கொடுத்தாக வேண்டும், பாகிஸ்தான் பொருளியல் அதற்கு விலை கொடுத்தாக வேண்டும்,” என்று பாகிஸ்தானை எல்லையாகக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையிலான நதி நீர் ஒப்பந்தம், இந்தியாவிலிருந்து பாயும் ஆறுகளிலிருந்து பாகிஸ்தான் விவசாயத்துக்கு 80 விழுக்காட்டு நீரை வழங்குகிறது.
ஆனால் நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததால் பாகிஸ்தானுக்கு உடனடி பாதிப்பு எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் நிதி அமைச்சர் மே மாதம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மூண்ட சண்டை ஒரு சில நாள்களில் முடிவுக்கு வந்தது.
இதற்கு தான் ஏற்பாடு செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
“ஏப்ரல் 22ஆம் தேதி நடந்ததுபோன்ற தாக்குதல் நடைபெற்றால் அதற்குப் பதிலடியாக பயங்கரவாதிகளைத் தாக்குவோம்,” என்று முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முன்னதாக ஒரு நேர்காணலில் எச்சரித்திருந்தார்.