புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்களுக்குப் பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய குடிமக்கள் விருதான ‘நிஷான்-ஏ-இம்தியாஸ்’ (Nishan-e-Imtiaz) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா, தீவிர உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு குணப்படுத்த முடியாத காச நோய் பாதிப்பு இருந்தது பின்னர் தெரியவந்தது.
அவருக்குச் சிகிச்சை அளித்த மும்பை, பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பொது மருத்துவருக்கும் ஒரு கதிரியக்கவியலாளருக்கும் (Radiologist) இந்த உண்மை தெரியும் என்ற போதிலும் யாரிடமும் அதைப் பகிரவில்லை.
ஜின்னாவின் நோய் விவரம் வெளியில் தெரிந்தால், பிரிவினைத் திட்டம் ஒத்திவைக்கப்படலாம் அல்லது பாகிஸ்தான் உருவாகும் வாய்ப்பே கைநழுவிப் போகலாம் என்ற சூழல் நிலவியது. எனவேதான் ரகசியம் காக்கப்பட வேண்டியிருந்தது.
அந்த நெருக்கடி வேளையில் இரு இந்திய மருத்துவர்களும் தங்களது ‘மருத்துவ ரகசியக் காப்பு’ (Medical Ethics) உறுதிமொழியை நேர்மையுடன் காப்பாற்றினர்.
அமைதியான சேவைக்கு உயரிய அங்கீகாரம்
மருத்துவத் தொழிலின் தர்மத்தைக் கடைப்பிடித்து, வரலாற்றின் மிக முக்கியமான ரகசியங்களில் ஒன்றைப் பாதுகாத்ததற்காக பாகிஸ்தான் அரசு இந்த விருதை அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ல் அறிவிக்கப்பட்ட இவ்விருதுகள், வரும் 2027 மார்ச் 23 அன்று நடைபெறும் பாகிஸ்தான் தின விழாவில் அந்நாட்டு அதிபரால் அதிகாரபூர்வமாக வழங்கப்படும். விருதுபெறும் இந்திய மருத்துவர்களின் பெயர்கள் பாகிஸ்தான் அரசால் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த 1998ல் பிரபல இந்தித் திரைப்பட நடிகர் திலீப் குமாருக்கும் இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.


