புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது வாரத்தின் முதல் நாளிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி காலை தொடங்கியது.
முதல் நாளில் இருந்து ஆப்பரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல், பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து உடனடியாக விவாதிக்கும்படி எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
ஆப்பரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடத்தப்பட்ட நிலையில், பிகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், வாக்குத் திருட்டு குறித்து ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டை விவாதிக்கக் கோரி நான்காவது வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
ஆனால், இரு அவைத் தலைவர்களும் அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர்.
இதையடுத்து, இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தொடர்ச்சியாக நான்கு வாரங்களாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.